தர்பங்கா: பீகார் கல்வி அமைச்சர் ஒரு முட்டாள் என்று ஒன்றிய இணை அமைச்சர் அஸ்வினி சவுபே கூறியது பீகார் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டம் பஹேடி கிராமத்தில் நடந்த பாஜகவின் 9 ஆண்டுகள் சாதனை கூட்டத்தில், ஒன்றிய இணை அமைச்சர் அஸ்வினி சவுபே கலந்து கொண்டார். மேடையில் உரையாற்றிய பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘பீகார் மாநில கல்வி அமைச்சர் ஒரு முட்டாள்; அவரை மாநில கல்வி அமைச்சராக்கியது யார்? பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு, துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கனவு காண்கின்றனர். அவர்கள் லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு பின்னர் நேபாளம் வழியாக சென்றுவிடுவார்கள்.
பீகாரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கு மாநில அரசு தடையாக உள்ளது. கட்டுமான பணிகள் தாமதமானதற்கு பீகார் முதல்வர் தான் காரணம். பீகாரில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க கூடாது என்பதற்காக நிலம் ஒதுக்கீடு பிரச்னையை பீகார் அரசு செய்து வருகிறது. என்ன விலை கொடுத்தாலும் தர்பங்காவில் எய்ம்ஸ் கட்டப்படும்’ என்று கூறினார். ஒன்றிய இணை அமைச்சர் அஸ்வினி சவுபே, மாநில கல்வி அமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு ஆளுங் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
The post பீகார் கல்வி அமைச்சர் ஒரு முட்டாள்: ஒன்றிய அமைச்சரின் பேச்சால் சர்ச்சை appeared first on Dinakaran.