திருவாரூர்,டிச.4:டெல்லியில் விவசாயிகள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவாரூரில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.மத்திய அரசின் 3 வேளாண் அவசர சட்டங்களை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் திருவாரூரில் நேற்று தலைமை தபால் நிலையம் முன்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில துணைச் செயலாளர் பிரகாஷ், மாவட்ட செயலாளர் சுர்ஜித் மற்றும் பொறுப்பாளர்கள் சந்தோஷ், அஜய், அருண்,சூர்யா உட்பட பலர் கலந்து கொண்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேர்களை டவுன் போலீசார் கைது செய்து திருவாரூர் சன்னதி தெருவில் இருந்து வரும் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்து மாலையில் விடுதலை செய்தனர்.