வாலிபரை தாக்கியதாக 6 பேர் மீது வழக்குபதிவு; 2 கத்திகள் பறிமுதல்

நாகர்கோவில், நவ.30: நாகர்கோவில் அருகே பறக்கை பொட்டல்விளையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் பிரதீப்ராஜா(20). நேற்று முன்தினம் இரவு இவர் தனது நண்பரை டெரிக் சந்திப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவிட பைக்கில் அழைத்து வந்துள்ளார். கலெக்டர் அலுவலகம் அருகே  வரும் போது நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியை சேர்ந்த மதன் (35) என்பவர் பைக்கில் வந்து மோதியுள்ளார். உடனே பிரதீப் ராஜா தனது பைக்கில் இருந்து இறங்கி ஏதாவது சேதம் ஏற்பட்டுள்ளதா என பார்த்துவிட்டு செல்ல முயன்றுள்ளார். அப்போது மதன் மற்றும் அங்கு வந்த ராமன்புதூர் பகுதியை சேர்ந்த ஆல்வின் செல்வராஜ்(35), ஆல்வின் செல்வ சேவியர்(33), நவீன்குமார்(27) மற்றும் இருவர் சேர்ந்து பிரதீப் ராஜாவை தாக்கியுள்ளார்கள். இது தொடர்பாக பிரதீப் ராஜா கோட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் 6 பேர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் வாலிபர் ஒருவரது பைக்கில் பதுக்கி வைத்திருந்த 2 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் வந்த பைக்கில் நம்பர் பிளேட்டும் இல்லை என்று கூறப்படுகிறது. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் அவருக்கு வேறு குற்றச்செயல்களில் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர். கலெக்டர் அலுவலகம் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: