மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

கூடலூர், நவ. 30: கூடலூரில் கோயில் பணி செய்தபோது, வாலிபர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கூடலூரில் உள்ள பொம்மச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மூர்த்தி (27). இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கால் சில மாதங்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பினார். இந்நிலையில், கூடலூர்-குமுளி மெயின்ரோட்டில் பொம்மச்சியம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா பணிகளை, நண்பர்களுடன் சேர்ந்து நேற்று மூர்த்தி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சீரியல் பல்ப் வயரை தொட்ட மூர்த்தி மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே மூர்த்தி இறந்ததாக தெரிவித்தனர். இது குறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: