காரைக்குடி, நவ. 20: காரைக்குடியில் பொது கழிப்பறையில் மேற்கூரை இல்லாததால் பெண்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. காரைக்குடி நகரின் முக்கிய வணிக பகுதியாக கொப்புடைய நாயகி அம்மன் கோயில் சுற்றுவட்டாரம், அம்மன் சன்னதி, கல்லுகட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதிக்கு காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் பொருட்கள் வாங்க அதிகளவில் வருகின்றனர். தவிர கொப்புடைய நாயகி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். நகை கடைகள், செட்டிநாடு பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடை என 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளதால் நகரின் முக்கிய வியாபார தலமாக உள்ளது. தினமும் 1000க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்லும் நிலையில் பொதுமக்களின் வசதிக்காக மெ.மெ. வீதியில் நகராட்சி சார்பில் பொதுகழிப்பறை கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதனை முறையாக பராமரிப்பது கிடையாது.. இதனால் கடும் துர்நாற்றம் வருவதோடு பயன்படுத்த முடியாத அளவில் உள்ளது. தவிர கழிப்பறைக்கு மேற்கூரை இல்லாததால் பெண்கள் மிகவும் சிரமப்படும் நிலை உருவாகி உள்ளது. இதுகுறிது பலமுறை மனுகொடுத்தும் கண்டுகொள்ளப்படாத நிலையே உள்ளது என சமூகஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.