இன்று பூந்தமல்லிக்கு வருகை தரும் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் மனுக்களை அளிக்கலாம்: மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் வேண்டுகோள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் ஆவடி சா.மு.நாசர், டி.ஜெ.கோவிந்தராசன், எம்.பூபதி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:   2021 தமிழக சட்டமன்ற பொது தேர்தலையொட்டி திமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படவுள்ளது. இதற்காக இன்று காலை 9 மணியளவில் பூந்தமல்லி சடையப்பா திருமண மண்டபத்தில் நடைபெறும் கருத்து கேட்கும் நிகழ்ச்சிக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.இராசா எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., கனிமொழி எம்.பி., திருச்சி சிவா எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., பேராசிரியர் அ.இராமசாமி ஆகியோர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு வருகை தர உள்ளனர்.

 மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் நேரடியாகச் சந்தித்து, அவர்களின் ஆலோசனைகளை பெற்று அவர்களது கோரிக்கைகளின் சாராம்சங்களை தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்ய உள்ளனர். எனவே எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில்  திமுக நிர்வாகிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் கலந்துக் கொண்டு தங்களது கருத்துக்கள், கோரிக்கைகள், பொதுப் பிரச்சினைகள், மற்றும் ஆலோசனைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Related Stories: