ஊட்டி, நவ. 10: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் பட்டாசு கடைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்கப்படாத நிலையில் வியாபாரிகள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு கடைகள் வைப்பது வழக்கம். பட்டாசு கடைகள் வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும். அதற்கு இரு மாதங்களுக்கு முன்னதாக லைசன்ஸ் பெற வேண்டும். மேலும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கட்டிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள். அவர்கள், ஆய்வு செய்த பின்னரே பாதுகாப்பான இடங்களில் பட்டாசு கடைகள் வைக்க அனுமதி அளிக்கப்படும். பொதுவாக தீபாவளி பண்டிகைக்கு 15 நாட்களுக்கு முன் அனுமதியளிக்கப்படும். அனுமதி கிடைத்த பின்னரே அவர்கள் சிவகாசி சென்று, பட்டாசுகளை ஏற்றி வருவது வழக்கம். இம்முறையும் 50க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.