கரூர், நவ. 9: கரூர் தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இந்த கல்வியாண்டில் (2020- 21) கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்) அரசால் துவங்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு தற்காலிக இணைவு வழங்கும் வகையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட 9 நபர்கள் கொண்ட ஆய்வுக்குழுவினர் இன்று (9ம் தேதி) காலை கடவூர் ஒன்றிய அலுவலக வளாகம் தரகம்பட்டியில் அமைந்துள்ள கல்லூரிக்கு வரவுள்ளனர். ஆய்வுக்குழுவினர் தங்களின் ஆய்வின் போது, கல்லூரி அமைந்துள்ள இடம், உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், கழிப்பிடங்கள், குடிநீர் வசதி போன்ற பல்வேறு அம்சங்களையும் ஆய்வு செய்யவுள்ளனர்.