அரியலூர், நவ. 5: மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும். மனுதர்ம நூலில் பெண்களை இழிவாக பேசியுள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கிராமங்கள் தோறும் வீடுவீடாக சென்று எடுத்து கூற வேண்டுமென கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார். அதன்படி அரியலூர் மாவட்டம் செந்துறை பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுமக்களிடம் மனுதர்ம நூல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விசிக மாநில பொறுப்பாளர் கருப்புசாமி தலைமை வகித்தார். இந்த தகவல் கிடைத்ததும் செந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று துண்டு பிரசுரங்களை வழங்கிய பாலசிங்கம், பாலமுருகன், கந்தன் உட்பட 20 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர். இதேபோல் திருமானூரில் துண்டு பிரசுரங்கள் வழங்கிய விசிகவினரை போலீசார் கைது செய்தனர்.