ஆனைமலை, நவ. 4: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று, ரூ.27.55 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் போனது என அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த கொப்பரை ஏலத்திற்கு ஆனைமலை மற்றும் கோட்டூர், அம்பராம்பாளையம், சேத்துமடை, வேட்டைக்காரன்புதூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 85 விவசாயிகள் மொத்தம் 535 மூட்டை கொப்பரை கொண்டு வந்தனர்.
விவசாயிகள் கொண்டு வந்த கொப்பரைகள் முதல் தரம், இரண்டாம் தரம் என பிரிக்கப்பட்டு, விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. இதில், முதல் தரம் 285 மூட்டை கொப்பரை ஒருகிலோ ரூ.108.50 முதல் அதிகபட்சமாக ரூ.104.66 வரையிலும், இரண்டாம் தரம் 250 மூட்டை கொப்பரை ஒரு கிலோ ரூ.84.35 முதல் ரூ.93.50 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 27 டன் கொப்பரை ரூ.27.55 லட்சத்துக்கு ஏலம்போனது. அதனை 8 வியாபாரிகள் கொள்முதல் செய்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.