உத்தமபாளையம், நவ.1: உத்தமபாளையம் குருக்கள் தெருவில் தனியார் சிட்பண்ட் நிறுவனம் 32 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கியது. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, 500க்கும் மேற்பட்டோர் பல கோடிக்கும் மேல் டெபாசிட் செய்தனர். தவிர ஏலச்சீட்டு, மாதந்தோறும் வசூலிக்கப்படும் சேமிப்பு சீட்டு என பல கோடிகளை தாண்டி உள்ளது. மாதந்தோறும் வட்டி சரியாக வழங்கப்பட்ட நிலையில் 3 மாதத்திற்கு முன்பு இதன் பங்குதாரர்களில் ஒருவரான அஜீஸ்கான் திடீரென இறந்தார்.
இதனால் முதலீடு செய்தவர்களுக்கு வட்டி வழங்கப்படவில்லை. மற்றொரு பங்குதாரரான ஜமாலிடம், தங்கள் முதலீடு செய்த பணத்தை தருமாறுத செப்டம்பர் மாதம் நேரில் கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டனர். ஆனால், தன்னால் தர முடியாது என அவர் கைவிரிக்கவே, பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த வழக்கு திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையில் போலீசார் விசாரணை செய்து சிட்பண்ட்டை பூட்டி சீல் வைத்து சென்றனர்.