புதுக்கோட்டை, அக்.30: புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு முறைப்படி ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவலகப் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு அக்டோபர் முதல் வாரத்தில் அளிக்க வேண்டிய ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவர்கள் அனைவரும் நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர்பாஷாவிடம் நேரில் சென்று கோரிக்கை விடுத்தனர்.ஓரிரு நாட்களில் ஊதியம் வழக்கம்போல வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அவர் உறுதியளித்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில், இரு நாட்கள் கழித்தும் ஊதியம் வராததால், நேற்று காலை நகராட்சி அலுவலக வாயிலை முற்றுகையிட்டு நகராட்சிப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அமைதிப்பேச்சுவார்த்தை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளதாக போலீசார் தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த துப்புரவுப் பணியாளர்கள் தங்களுக்கு முறையாக காலதாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி முழக்கம் எழுப்பினர்.