திருவாரூர், அக்.23: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பகுதிகளில் மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து ரூ.75 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அதன்படி பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டம், தேசிய வேலை உறுதி திட்டம் ஆகியவற்றின் கீழ் ஆனை குப்பம், சலுப்பேரி, வீதிவிடங்கன், அச்சுதமங்கலம், வாழ்க்கை, முடிகொண்டான், திருமீயச்சூர், கொல்லுமாங்குடி, வேலங்குடி, மாவட்டகுடி உட்பட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த ஊராட்சி தலைவர், பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.