சங்கரன்கோவில். அக்.22: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆட்டின ஆராய்ச்சி மையம், வட்டாரபோக்குவரத்து அலுவலகம், வேளாண் உணவு பூங்கா, சிப்காட் ஆகியவை அமைக்கப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து இந்த அலுவலகங்கள் அமைய சங்கரன்கோவிலை அடுத்த சின்னகோவிலான்குளம் கிராமத்தின் அருகே ஊத்துமலை செல்லும் சாலையில் சுமார் 285 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதில் வேளாண் உணவு பூங்கா அமைக்க 10 ஏக்கர் இடமும், வட்டாரபோக்குவரத்து அலுவலகம் அமைக்க 5 ஏக்கர் இடமும், சிப்காட் அமைக்க 60 ஏக்கர் இடமும், ஆட்டின ஆராய்ச்சி மையம் அமைக்க 80 ஏக்கர் இடமும் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட இடங்களை நேற்று அமைச்சர் ராஜலட்சுமி மற்றும் மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இடத்தை ஆய்வு செய்த பின்னர் அடுத்தக்கட்ட இடத்தில் உள்ள மண்ணின் தன்மை, ஆட்டின ஆராய்ச்சி மையம் மற்றும் உணவு பூங்கா அமையவிருப்பதால் நீர்வளம் குறித்து ஆய்வு செய்யவும், விரைந்து பணிகள் மேற்கொள்வது குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.