விருதுநகர், அக். 21: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாடம் நடந்தது. சங்க தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அலுவலர்களுக்கு தாமதமின்றி நிவாரணம் வழங்க வேண்டும். காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு ஊழியர்கள் குடும்ப நல நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.5ல் சென்னையில் வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் மற்றும் நவ.25, 26 தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.