நகர் பகுதியில் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

பொள்ளாச்சி, அக். 20:    பொள்ளாச்சி நகரில் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு அதிகரிப்பதாக பொதுமக்கள் வேதனையடைந்து வருகின்றனர். பொள்ளாச்சி நகரில் பாலக்காடு ரோடு, கோவை ரோடு, உடுமலை ரோடு தேர்நிலை, ராஜாமில் ரோடு, நியூஸ்கீம் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து வாகன போக்குவரத்து உள்ளது. ஆனால், இந்த சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்படும், வாகனங்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. இதில் குறிப்பாக நியூஸ்கீம் ரோடு, பாலக்காடு ரோடு, தேர்நிலை பகுதிகளில் ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். இந்த சாலையில், இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் உள்ளிட்டவை நிறுத்துவதை தடுக்க, சில ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து போலீசார், அதில் நோ பார்க்கிங் அறிவிப்பு பலகை வைத்திருந்தனர். ஆனால், அதையும் மீறி வாகனங்களை நிறுத்தி செல்வதால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, நகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்களுக்கு இடையூறை தவிர்க்க, விதிமீறி வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: