திருமணமான இரண்டு ஆண்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை: கணவர் கைது

புதுக்கோட்டை, அக்.16: திருமணமான 2 ஆண்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவில் மர்மம் உள்ளது என பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், அவரது கணவர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மலையப்பா நகரை சேர்ந்தவர் மணிகண்ட குமார். இவரது மகன் ராஜா(33) என்பவருக்கும், திருச்சி பொன்னகர் கணேசன் மகள் சத்தியபிரியா (26) என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சத்தியபிரியாவிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி ராஜா தகராறு செய்வதாக கூறப்படுகிறது. நேற்று காலையில், சத்தியபிரியா, புதுக்கோட்டை மலையப்பா நகரில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சத்தியபிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சத்தியபிரியாவின் தந்தை கணேசன் திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், எனது மகள் சத்தியபிரியாவின் கணவர் ராஜா மற்றும் ராஜாவின் குடும்பத்தினர் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். என் மகள், அடிக்கடி எங்களிடம் கூறி அழுவார். அதற்கு நாங்கள் அமைதியாக இரு விரைவில், அவர்கள் கேட்டும் வரதட்சணையை கொடுத்து விடுகிறோம் என்று கூறி வந்தோம். அதற்குள் அவர் தூக்குமாட்டி இறந்துவிட்டதாக தகவல் கொடுத்தனர். எனது மகள் சத்தியபிரியா சாவில் மர்மம் உள்ளது. இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜாவை கைது செய்தனர். திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆனதால், கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: