வி.கே.புரம், அக்.2: சிவந்திபுரம் ஊராட்சியில் சீரான குடிநீர் வழங்க கோரி சிவந்திபுரம் ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
சிவந்திபுரம் ஊராட்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்திலேயே பெரிய ஊராட்சி ஆகும். இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக பாபநாசம், புலவன்பட்டி, ஆலடியூர் போன்ற இடங்களில் தாமிரபரணி ஆற்றின் பகுதியில் உறைகிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை ஊராட்சிக்கு உட்பட்ட அம்மா நகர் பகுதியில் குடிநீர் சீராக வழங்கப்படவில்லை எனக்கூறி இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.