உடன்குடி, அக். 2: மெஞ்ஞானபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மெஞ்ஞானபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று திடீரென வருகைதந்து ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பிரசவ வார்டு, உள்நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, மருந்தகம், சுகாதாரநிலைய வளாகங்களை பார்வையிட்ட எம்.எல்.ஏ., அங்கிருந்த நோயாளிகளிடம் குறைகள் எதுவும் உள்ளதா? என கேட்டறிந்தார். பின்னர் வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரமின், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களிடம் சுகாதார நிலையத்திற்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளனவா? எனக் கேட்டறிந்தார்.