ஆர்.எஸ்.மங்கலம், அக்.1: ஆர்.எஸ்.மங்கலத்தில் திருமணமான மூன்று மாதத்தில் இளம் பெண் மர்மமாக இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் நன்னியாவூரை சேர்ந்தவர் கவுசல்யா(21). இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் வாகவயல் கிராமத்தை சேர்ந்த ரெத்தினம் மகன் பாக்கியராஜ்(32) என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது. இவர்கள் ஆர்.எஸ்.மங்கலம் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று கவுசல்யா மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். இது பற்றிய தகவல் போலீசாருக்கு தெரியவந்ததும், திருவாடானை டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அது யாரையும் பிடிக்காமல், வீட்டை சுற்றியே வந்தது.