பாவூர்சத்திரம், செப்.26:ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்தில் உபரிநீர் கொண்டு வரப்படும் நாராயணப்பேரி கால்வாய் சீரமைப்பு பணிகளை செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கீழப்பாவூர் பகுதி மக்களின் 48 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம், செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்எல்ஏவின் தொடர் கோரிக்கையை ஏற்று, ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டப்பணிக்கு ரூ.41.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.தற்போது பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆவுடையானூர் பத்மநாதபேரிகுளத்தில் இருந்து புங்கன்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் ஆவுடையானூரில் புதிய இணைப்பு கால்வாய் தோண்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது.இத்திட்டத்தில் உபரிநீரை கொண்டு வரும் நாராயணப்பேரி கால்வாய் ஆழப்படுத்துதல், அகலப்படுத்துதல், கரைகள் பலப்படுத்துல் போன்ற பணிகள் நடைபெறுகின்றன. இதனை செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்எல்ஏ பார்வையிட்டார்.