திருவள்ளூர், மார்ச் 19: புகார்தாரர்கள் மத்தியில் ‘கொரோனா’ விழிப்புணர்வு ஏற்படுத்த, திருவள்ளூர் டவுன், தாலுகா உட்பட அனைத்து போலீஸ் நிலையம் முன், கை கழுவ பக்கெட்டுகளில் தண்ணீர் மற்றும் சோப்பு வைக்கப்பட்டு உள்ளது.
‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு, பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் பொதுமக்கள் மத்தியில், கை கழுவுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வெளியில் சென்று வீடு திரும்புவோர், கைகளை கழுவிய பின்பே பிற பணிகளை செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. இதை பணிக்கு சென்று வரும் போலீசார் மற்றும் போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் மனுதாரர்களும் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி., அரவிந்தன் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.