லால்குடி, மார்ச் 18: லால்குடியை அடுத்த புஞ்சை சங்கேந்தி ஊராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது. புள்ளம்பாடி ஒன்றியத்தை சேர்ந்த புஞ்சைசங்கேந்தி கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து இடியும் தருவாயில் இருந்தது. மேலும் மழைகாலங்களில் மழைநீர் மையத்தின் உள்ளே கசிந்து வந்தது. இதையடுத்து கிராம மக்கள் மற்றும் மைய பணியாளர்கள் லால்குடி எம்எல்ஏ சவுந்தரபாண்டியனிடம் புதிய மைய கட்டிடம் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்து பணி முடிவுற்று திறப்பு விழா நடந்தது.