குன்னூர், மார்ச் 18: நீலகிரி மாவட்டம் உலிக்கல் பஞ்சாயத்தில் செங்கல்புதூர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 50 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை வசதிகள் இல்லாததால் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகளை தொட்டில் கட்டி வனப்பகுதிகள் வழியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று வந்தனர். முறையான சிகிச்சை அளிக்க முடியாமல் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் அவ்வாறு அழைத்து செல்லும் போது வனப்பகுதிகளில் உள்ள வன விலங்குகள் தாக்குதலுக்கும் உள்ளாகினர். இதனால் பழங்குடியின மக்கள் அரசை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். அதன் பின்னர் கடந்த 2018ம் ஆண்டு ட்ரூக் முதல் செங்கல்புதூர் வரை சாலை அமைக்க ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.