மானாமதுரை, மார்ச் 10: மானாமதுரை நகரில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டிகள் பழுது அடைந்து போனதால் அகற்றப்பட்டது. அதன்பின் புதிய குப்பைகள் தொட்டிகள் வைக்கப்படாததால் பொதுமக்கள் குப்பைகளை தெருவில் வீசி செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் மானாமதுரை பேரூராட்சியில் அதிக மக்கள் வசிக்கின்றனர். பெருகி வரும் குடியிருப்புகளால் நகராட்சி அந்தஸ்திற்கு உயர்ந்து வருகிறது. தினமும் 12 டன் குப்பைகள் சேகரமாகிறது. 18 வார்டுகளிலும் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றிவரும் நிலையில் முக்கிய தெருக்களில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகள் பழுது அடைந்து அகற்றப்பட்டது. அந்த இடங்களில் புதிய குப்பைதொட்டிகள் அமைக்கப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் குப்பைகளை தெருவில் வீசிசெல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.