மயிலாடுதுறை, மார்ச் 6: மயிலாடுதுறை கூறைநாடு சின்ன பள்ளிவாசல் தெருவில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இஸ்லாமிய பெண்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் கடந்த 8 தினங்களாக ஈடுபட்டு வருகின்றனர். நாகை வடக்கு மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் ‘மயிலாடுதுறை ஷாஹின் பாக்’ என தலைப்பிட்டு நடத்தப்படும் இந்த தொடர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் கிளியனூர் ஊராட்சிமன்ற தலைவர் முகமதுஹாலித் தலைமை வகித்தார். இந்த தர்ணா போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டனர். நாம் தமிழர் கட்சியின் சாகுல்ஹமீது மற்றும் திராவிடர் விடுதலைக்கழகத்தின் மாவட்ட செயலாளர் மகேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.