பெரியகுளத்தில் குடிபோதையில் நடு ரோட்டில் தகராறு செய்தவர் கைது

பெரியகுளம், மார்ச் 6: பெரியகுளத்தில் குடிபோதையில் நடு ரோட்டில் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர். பெரியகுளம், தென்கரை, வள்ளுவர் சிலை அருகே 2 அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளுக்கு பெரியகுளம் நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான மதுப்பிரியர்கள் வந்து மதுபாட்டில்களை வாங்கி, அங்கேயே மது குடித்துவிட்டு செல்கின்றனர். இந்த மதுக்கடை பகுதிக்கு அடுத்தாற்போல் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் உள்ளன. இங்கு கூடுதலாக மது அருந்திய  மதுப்பிரியர்கள் தன்னிலை மறந்து நடுரோட்டிலேயே படுத்துவிடும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.மேலும் மதுபோதையில் தகராறிலும் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வடகரையை சேர்ந்த மாயக்கண்ணன் (41) என்பவர் மது அருந்திவிட்டு நிலைதடுமாறி வடகரை நான்கு சாலை சந்திக்கும் இடத்தில் நடுரோட்டில் தான் அணிந்திருந்த வேஷ்டியை விரித்து படுத்துக்கொண்டார். அவரை போலீசார் கண்டித்து அப்புறப்படுத்தியும் மீண்டும் ரோட்டிலேயே படுத்துக் கொண்டார். அவரை பொதுமக்கள் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயக்கண்ணனை கைது செய்தனர்.

Related Stories: