திருநின்றவூர், மார்ச் 4; ஆவடியை அடுத்த திருநின்றவூரில் இருந்து தாம்பரத்திற்கு நேரடியாக பஸ் வசதியின்றி பல ஆண்டாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்க, நெமிலிச்சேரி-வண்டலூர் 400 அடி வெளிவட்ட சாலை வழியாக புதிய வழித்தடத்தில் மாநகர பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். சென்னையை ஒட்டி திருநின்றவூர் பேரூராட்சி உள்ளது. இதனை சுற்றி பாக்கம், நடுக்குத்தகை, நெமிலிச்சேரி, நத்தம்பேடு, கொசவன்பாளையம், மேலப்பேடு, மேல்கொண்டயார், வேப்பம்பட்டு, பாலவேடு உள்ளிட்ட ஊராட்சிகளும் உள்ளன. மேற்கண்ட பகுதிகளில் ரூ.2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக, திருநின்றவூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாம்பரம், வண்டலூர், மறைமலை நகர், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வருகின்றனர். மேலும், இவர்கள் பல்வேறு பணிகள் நிமித்தமாக தாம்பரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று வரவேண்டுமானால் பலகிலோ மீட்டர்தூரம் சுற்றித்தான் ரயில், பஸ் மூலம் செல்ல வேண்டியது உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், திருநின்றவூர் சுற்றுப்புறத்தை சேர்ந்த பொதுமக்கள் தாம்பரத்திற்கு ரயில் மூலம் செல்ல வேண்டுமானால் சென்ட்ரல், கடற்கரை மார்க்கம் சென்றுதான் செல்ல வேண்டும். மேலும், அவர்கள் பேருந்தின் மூலம் செல்லவேண்டுமானால் ஆவடி வந்து, அதன் பிறகு பூந்தமல்லி வழியாக செல்ல வேண்டும்.