உத்தமபாளையம், மார்ச் 4: தேனி மாவட்டத்தில் வாக்காளர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பழைய முறையான படிவம் வாங்கி விண்ணப்பிக்கும் முறைக்கு குட்பை சொல்லி வருகின்றனர். தேனிமாவட்டத்தில் உத்தமபாளையம், தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி ஆகிய ஊர்களில் தேர்தல் பிரிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த அலுவலகங்கள் மூலம் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர்களாக சேர்வதற்கு படிவம் 6 வழங்கப்பட்டது. இதை பூர்த்தி செய்து, அதனுடன் வயது சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும். இதை வாங்கும் அதிகாரிகள், இது குறித்து விசாரிக்கும் களப்பணியாளர்களிடம் வழங்குவர்.
ஆனால், தற்போது அனைத்தும் கணினிமயம் ஆகும் நிலையில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இனிமேல் தேர்தல் பிரிவு அலுவலகங்களுக்கு வரவேண்டியதில்லை. ஆன்லைன் விண்ணப்பம் மூலம் உரிய ஆதாரங்களை இணைத்தால் போதுமானது. தனியார் சென்டர்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.