பாலக்காடு, மார்ச் 4: திருப்பூரிலிருந்து, கேரளாவுக்கு 2100 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பாலக்காடு-திருச்சூர் தேசிய சாலையில் கண்ணாடி பகுதியில் போதைத்தடுப்புப்பிரிவு சிறப்பு போலீசார் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழகத்திலிருந்து வாளையார்-பாலக்காடு வழியாக திருச்சூர் நோக்கி வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 60 கேன்களில் 2 ஆயிரத்து 100 லிட்டர் எரிசாராயம் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம். இது தொடர்பாக கொல்லம் மாவட்டம் வேங்கராவைச் சேர்ந்த ராஜேந்திரபிரசாத் மகன் ஷியாம்பிரசாத் (26), கிழக்கு கல்லடாவைச் சேர்ந்த ரவி மகன் ரஞ்ஜித்குமார் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலிருந்து குறைந்த விலைக்கு எரிசாராயம் வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், இவர்கள் கடத்திய 2100 லிட்டர் எரிசாராயம், பிக்கப் வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.