மதுரை, மார்ச் 2: மதுரை மாவட்டத்தில் நெல் விளையும் பசுமை நிலமாக இருந்த பெரியாறு பாசன நிலம் 10 ஆயிரம் ஏக்கர் வீடு, கட்டிடங்களாக உருமாற்றம் அடைந்துள்ளதாக வேளாண் துறை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வேளாண்மை மேலோங்கி இருந்த மதுரை மாவட்டத்தில் வேளாண் நிலங்கள் சுருங்கி வருகின்றன. முல்லைப்பெரியாறு, வைகை, குண்டாறு, சாத்தையாறு போன்ற பாசனத்தை நம்பி பெரும்பாலான வேளாண்மை உள்ளது. இதில் பிரதானமாக அமைந்த பெரியாறு பாசன ஆயக்கட்டு ஆண்டுக்கு இருபோகம் நெல் விளையும் பூமி 43 ஆயிரம் ஏக்கர் பசுமையானது. இதுதவிர, ஒருபோக பாசன ஆயக்கட்டு மேலூர் பகுதியில் 85 ஆயிரம் ஏக்கரும், திருமங்கலம் கால்வாய் பாசனத்தில் 15 ஆயிரம் ஏக்கரும் உண்டு.
பெரியாறு அணையில் 2014 வரை 35 ஆண்டுகளாக 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்க முடியவில்லை. 142 அடி வரை தேக்க அனுமதி கிடைத்தும் பருவ மழை அடிக்கடி ஏமாற்றுகிறது. இதனால் ஆண்டுக்கு இருபோகம் நெல்சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காமல் பெரும்பாலும் ஒருபோகம் மட்டுமே விளைகிறது. அதிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. சில ஆண்டுகளில் இருபோகமும் பொய்த்து வறட்சி தலைதூக்குகிறது. இந்த சூழலில் பசுமை வயல்வெளிகள் சுருங்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வேளாண் துறையினர் மதுரை மாவட்ட பெரியாறு இருபோக ஆயக்கட்டு பகுதியில் ஆய்வு நடத்தினர்.