அவிநாசி,பிப்.28:திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பொங்கலூரில் செயல்படும் மத்திய அரசின் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட இயக்குனர் ஆனந்தராஜா மற்றும் மண்ணியல் துறை வல்லுனர் தனசேகர பாண்டியன் ஆகியோர் கூறியதாவது; மண் வளம் மற்றும் பயிர் மகசூல் அதிகரிப்பு ஆகியவை, மண்ணின் தன்மையை பொறுத்தே அமைகிறது. ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதால், மண்ணின் புவியியல் தன்மை, ரசாயனம் மற்றும் உயிரியல் பண்புகளில் மாற்றம் ஏற்பட்டு, மண் நலம், வளம் சீர்கெட்டு வருகிறது. மண் வளம் மேம்பட மண்ணிலுள்ள அங்ககக் கரிமத்தின் அளவை அதிகரிக்க செய்ய வேண்டும். மண் ஆய்வின்படி, பயிர்களுக்கு சமச்சீர் உரமிட வேண்டும். உயிர் உரம், பசுந்தாள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த உர நிர்வாகம், மண் மூடு பயிர்களின் பயன்பாடு, பயிற்சி சுழற்சி முறைகள், மண் அரிமானத்தை தடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். உயிர் உரங்கள், மண்ணில் நிலைத்து நின்று, மண் வளத்தை பாதுகாக்கும். அங்கக சத்தின் அளவு, 2-3 சதவீதம் வரை, இருக்க வேண்டும். ஆனால் வெப்பமண்டல நிலங்களில்,இச்சத்து 0.05 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.