கும்மிடிப்பூண்டி, பிப். 21: கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை ஏரி மற்றும் தேர்வாய் ஏரியை இணைத்து நீர்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் சென்னைக்கு 1 டிஎம்சி தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் தமிழக அரசின் சார்பில் திட்டம் தீட்டப்பட்டு, அதற்கான பணி கடந்த 2011ம் ஆண்டு துவங்கியது. இந்த திட்டத்திற்காக 800 ஏக்கர் பட்டா நிலம், 200 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் 1 மடங்கு இழப்பீடு அறிவித்தது. இதனை ஏற்காத விவசாயிகள் நீதிமன்றத்தை அணுகிய நிலையில் உச்சநீதி மன்றம் சந்தை மதிப்பில் 4 மடங்கு இழப்பீட்டு தொகையை அளிக்குமாறு அறிவித்தது. ஆனால் தமிழக அரசு மதிப்பீட்டில் 2.4 மடங்கு இழப்பீட்டை மட்டுமே வழங்கியது. இந்நிலையில் மீதம் உள்ள 1.6 மடங்கு இழப்பீட்டு தொகை மற்றும் அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகைக்கு 2013ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 589 விவசாயிகளுக்கு தர வேண்டிய வட்டி தொகையான 37.5 கோடி நிதியை வழங்க கோரி விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.