திருவெறும்பூர், பிப்.20: திருவெறும்பூர் அருகே துப்பாக்கி தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உருவாக்கிய அசால்ட் ரைபிள் குறித்த நேரத்தில் கொடுப்பதற்கு திட்டமிடாத பொது மேலாளரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவெறும்பூர் அருகே துப்பாக்கி தொழிற்சாலையில் ஊழியர்கள் கடந்த 2012ம் ஆண்டு திருச்சி அசால்ட் ரைபிள்ஸ் எனும் துப்பாக்கியை உருவாக்கினர். இது உலகத்தரம் வாய்ந்த துப்பாக்கி என சான்று பெற்றது. அதன் அடிப்படையில் கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டு 14 ஆயிரத்து 130 துப்பாக்கிகளை தயாரித்துக் கொடுக்க வேண்டும். அதனை உரிய காலத்தில் முடிப்பதற்கு தேவையான திட்டமிடலில்லை என்றும் திருச்சி அசால்ட் ரைபிள் துப்பாக்கி தயாரிப்பதற்கு தேவையான மூலப் பொருட்கள் கொள்முதல் செய்யாமல் துப்பாக்கி தொழிற்சாலை நிர்வாகம் தோல்வியடைந்தது. இதற்கு காரணமான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பொது மேலாளர் உடனடியாக இடமாற்றம் செய்து உத்தரவிடவும் தொழிற்சாலையை பாதுகாக்க தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டத்திற்கு அனைத்து பகுதியை தொழிலாளர்களும் ஆதரவு தரவேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் கடந்த 14ம் தேதி தர்ணா போராட்டமும், 17ம் தேதி கையெழுத்து இயக்கமும் நடந்தது. அதன் ஒரு பகுதியாக நேற்று பொதுமேலாளர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். ஆனால், போலீசார் அனுமதி மறுத்து தொடர்ந்து தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.