ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் திருப்பம்சொத்துத்தகராறில் தாய் மாமன்கள் கொன்று சடலத்தை வீசியது அம்பலம்

ஆவடி, பிப்.20: ஆவடி அருகே கோவில்பதாகையில் சொத்து தகராறில்  ஆட்டோ டிரைவரை கொலை செய்து சடலத்தை சாலையில் வீசிய பாதுகாப்புத்துறை ஊழியர்களான தாய்மாமன்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி அடுத்த கோவில்பதாகை, பூம்பொழில் நகர், பூங்கா தெருவைச் சேர்ந்தவர் புஜ்ஜி என்ற ராஜேஷ் (36). ஆட்டோ டிரைவர். கடந்த 17ம் தேதி இரவு 9.30மணி அளவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டு அருகே உள்ள இறைச்சிக்கடை பகுதியில் சாலையோரத்தில் நேற்று முன்தினம் ராஜேஷ் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா மூலமாக தகவல்களை சேகரித்தனர். இதில், ராஜேஷை கொலை செய்தது, அவரது தாய்மாமன்களான வேலூர் அருகே காட்பாடி பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (56), கோவில்பதாகை, அசோக் நகரைச் சார்ந்த முனியப்பன் (52) என்றும், இருவரும் ஆவடி பாதுகாப்புத்துறை தொழிற்சாலையில் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர் என்ற விவரங்கள் தெரிய வந்தது.

இதனையடுத்து, நேற்று காலை தனிப்படை போலீசார்,   இருவரையும் பிடித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் ராஜேசுக்கு, சவுந்தரியா என்ற மனைவி, 3 பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ், ஆட்டோ ஓட்டாமல் ஊர்சுற்றி வந்துள்ளார்.  இதனால் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, சமீபத்தில் ராஜேஷிடம் கோவித்துக்கொண்டு குழந்தைகளை விட்டு விட்டு சொந்த ஊரான ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சவுந்தரியா சென்று விட்டார். இதன் பிறகு,  ராஜேஷ் 3 குழந்தைகளுடன் தாய் நாகராணி (61) வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும், மனைவி பிரிந்து சென்றதால், ராஜேஷ் குடிபழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார். மேலும், இவர், அடிக்கடி குடித்து விட்டு தாய் நாகராணியிடம்  தகராறு செய்வது வழக்கம்.  இதோடு மட்டுமல்லாமல், வீட்டை விற்று, தனக்குரிய பங்கைத் தரும்படி நாகராணியை துன்புறுத்தியுள்ளாராம்.

இதனையடுத்து, கடந்த 12ம் தேதி நாகராணி, ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர்,  ராஜேசை போலீசார் அழைத்து கண்டித்து அனுப்பியுள்ளனர். தகவலறிந்த  அவரது தாய்மாமன் குணசேகரன், வீட்டுக்கு வந்து ராஜேசை கண்டித்துள்ளாராம். பின்னர், அவரும்  சொத்தில் பங்கு தனக்கும் தரவேண்டுமென  கேட்டுள்ளாராம். இதற்கு, ராஜேஷ் எதிர்ப்பு தெரிவித்து குணசேகரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, குணசேகரன், தனது தம்பி முனியப்பனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். பின்னர், அவர்கள் இருவரும் சேர்ந்து ராஜேசை தட்டிக்கேட்டுள்ளனர்.  பின்னர், இருவரும் சேர்ந்து ராஜேசை சரமாரியாக உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த  ராஜேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து, அவர்கள் நள்ளிரவு வீட்டு தரையில் படிந்து இருந்த ரத்தக்கறையை கழுவிவிட்டுள்ளனர். பின்னர், இருவரும் ராஜேஷின் உடலை தூக்கிக்கொண்டு வீட்டில் இருந்து அருகில் உள்ள இறைச்சி கடை முன்பு தெருவில் போட்டு விட்டு இருவரும் தப்பிச்சென்றனர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  குணசேகரன், முனியப்பன் ஆகிய இருவரையும் போலீசார் கைது  அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: