பொன்னேரி, பிப். 20: சமூக விரோதிகளின் புகலிடமான சுடுகாடு, கல்லறை தோட்டம், மையவாடி ஆகியவற்றுக்கு சுற்றுச்சுவர், தண்ணீர், மின்சாரம், சாலை போன்ற அடிப்பவடை செய்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரியன்வாயல் கிராமத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்துக்களுக்கு சுடுகாடு, கிறிஸ்தவர்களுக்கு கல்லறை தோட்டம், முஸ்லிம்களுக்கு மையவாடி தனித்தனியாக உள்ளது. அரியன்வாயல் கிராமத்தில் யாராவது இறந்தால், அவரது சடலத்தை அவர்களது மத சடங்குகள் படி எரிக்கவோ அல்லது அடக்கம் செய்யப்படுகிறது. சுடுகாடு, கல்லறைதோட்டம், மையவாடிக்கு சுற்றுச்சுவர், தண்ணீர் வசதி உள்பட எந்த அடிப்படை வசதிகளுக்கு செய்யப்பட வில்லை என தெரிகிறது. இதனால் சுடுகாட்டுக்கு சடலங்களை இரவு நேரத்தில் எடுத்து வருபவர்கள் மின் விளக்கு இல்லாததால் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி சுடுகாட்டை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.