தேவாரம், பிப்.20: தேவாரம் மலையடிவாரத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் கட்டப்பட்ட தடுப்பணைகள் முறையாக பராமரிப்பு இல்லாததால் சேதம் அடைவதால் தண்ணீர் தேங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. தேவாரம் எந்தவிதமான குறிப்பிடத்தக்க நீர்நிலை ஆதாரங்களும் இல்லாத பகுதியாக உள்ளது. மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டி அடர்ந்த காடுகள் அதிகமாக உள்ளன. கோம்பை, பண்ணைப்புரம், ராமக்கல்மெட்டு, தே.ரெங்கநாதபுரம் என அனைத்து பகுதிகளுமே மலையடிவாரத்தை ஒட்டியே அமைந்துள்ளன. இதற்கு கீழ்புறமாக பலஆயிரம் ஏக்கர்நிலங்கள் உள்ளன. மழை பெய்தால்மட்டுமே இங்குள்ள நிலங்களில் காட்டுவிவசாயம் நடைபெறும். தக்காளி, எள், நிலக்கடலை, கப்பை என மலையடிவாரநிலங்களில் அதிகமான அளவில் பயிரிடப்படுவது வழக்கமாக இருக்கிறது. மலையடிவாரத்தை ஒட்டி உள்ள நிலங்களில் நிலத்தடிநீர்மட்டம் உயர்வதற்காக தடுப்பணைகள் அதிகமான அளவில் கட்டப்படுகின்றன. வேளாண்மை பொறியியல்துறை, வனத்துறை, மற்றும் தனியார் தொண்டுநிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கட்டப்படும் சிறிய தடுப்பணைகளால் ஒருபுறம் மழை பெய்யும்போது தண்ணீரும், மறுபுறம் வனத்தில் இருந்து வெளியே வரக்கூடிய காட்டுவிலங்குகள் தண்ணீர் பருகவும் இவை பயன்படுகின்றன.