சாயல்குடி, பிப்.20: முதுகுளத்தூர் அரசு கல்லூரிக்கு சென்று வர காலை, மாலையில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ‘கடந்த 2012-13ம் ஆண்டில் முதுகுளத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறக்கப்பட்டது. அரசு மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வந்த தற்காலிக கல்லூரிக்கு முதுகுளத்தூர்-தேரிருவேலி-ராமநாதபுரம் வழித்தட சாலையோரம் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. புதிய கட்டிடம் 2017ல் திறக்கப்பட்டது. இங்கு இளநிலை பாடப்பிரிவுகளான தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். முதுகுளத்தூர் பகுதியிலுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் முதுகுளத்தூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லூரிக்கு வந்து, செல்ல காலை, மாலை நேரத்திற்கு அவ்வழியாக பஸ் வசதியில்லாததால் தினந்தோறும் சுமார் 6 கிலோ மீட்டர் நடந்து வந்து, செல்லும் நிலை உள்ளது. எனவே கல்லூரி நேரத்திற்கு சென்று, வர காலை, மாலை நேரங்களில் முதுகுளத்தூரிலிருந்து கல்லூரிக்கு கூடுதல் டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.