மதுரை, பிப். 19: மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் தகுதியில்லாத பல ஆயிரம் பேருக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டது தெரியவந்தது. இதன்பேரில், 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் தகுதியில்லாத பல ஆயிரம் பேருக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம், மதுரை நகர் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் கமிஷனர், மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டார். உதவி கமிஷனர் ஜஸ்டின் பிரபாகர் தலைமையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர் விசாரணை நடத்தினர். இதில், லைசென்ஸ் மற்றும் பாட்ஜ் பெற அரசு நிர்ணயித்த கல்வித்தகுதியை விட குறைந்த கல்வித் தகுதி உள்ள நபர்களுக்கும் போலி ஆவணங்கள் மூலம் லைசென்ஸ், பாட்ஜ் வழங்கியது தெரிந்தது.