ஊத்துக்கோட்டை, பிப். 19: பெரியபாளையம் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 160 பேர் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக போலி டாக்டர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டனர். பெரியபாளையம் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சேம்பரில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்வதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவள்ளூர் மாவட்ட சட்ட பணி ஆணைக்குழு செயலாளரும், நீதிபதியுமான சரஸ்வதி தலைமையில், ஊத்துக்கோட்டை தாசில்தார் முருகநாதன், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன், வெங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயவேல், பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, ஊத்துக்கோட்டை எஸ்.ஐ. ராக்கி குமாரி மற்றும் போலீசார் நேற்று மாலை திடீரென புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள செங்கல் சேம்பரில் சோதனை நடத்தினர். அப்போது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என 160 பேரை மீட்டனர்.