ஈரோடு, பிப்.13: ஈரோடு மாநகரில் வடக்கு, தெற்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில், தெற்கு போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ. விஜயகுமார் நேற்று முன்தினம் ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக ஆம்புலன்சில் வந்த ஈரோடு சடையம்பாளையம் குறிஞ்சி நகரை சோ்ந்த முருகேசன் மகன் சரவணக்குமாருக்கு (27) இ-சலான் கருவி மூலம் ரூ.1,200 அபராதம் விதிக்கப்பட்டது. சரவணக்குமார் ஓட்டி வந்த ஆம்புலன்ஸ் நோயாளிகள் உள்ளே இல்லாமல் அதிக சத்தத்துடன் ஒலி மாசு ஏற்படுத்தியதாகவும், சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்டி வந்ததாகவும், முறையான சீருடை இல்லாமல் வாகனத்தை ஓட்டியதாகவும் வழக்குப்பதிவு செய்து இந்த அபராதத்தை எஸ்.ஐ. விதித்துள்ளார். ஆனால், இந்த அபராத தொகையை சரவணக்குமார் செலுத்த மறுத்து சென்றதாக கூறப்படுகிறது.