திருவள்ளூர், பிப் 13 : திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் டி.ஜான் மகேந்திரன், துணைத்தலைவர் வை.ஜவஹர் அலி மற்றும் உறுப்பினர்கள் எஸ்.ஜெ.ஜெபமாலை இருதயராஜ், எ.ராஜன், யு.சுதிர் லோதா, ஜெ.அஜீத் பிரசாந்த் ஜெயின், அர்பிளிந்தர் சிங் ஆகியோர் தலைமையில், செயலர் எஸ்.சுரேஷ் குமார், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில், சிறுபான்மையினர் பிரநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் டி.ஜான் மகேந்திரன் கூறுகையில், ‘’திருவள்ளுர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக 2018-19ம் ஆண்டில் 14 குழுக்களுக்கு கடனாக ₹7 லட்சமும், 54 நபர்களுக்கு தனிநபர் கடனாக ₹27 லட்சமும் வழங்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் தனிநபர் கடன், குழுக்கடன் உட்பட ₹110 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தால் பல்வேறு நலத்திட்ட உதவிகளின் கீழ் 237 பயனாளிகளுக்கு ₹ 14,55,750 செலவில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.