ஈரோடு, பிப்.11: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக, பெரும்பள்ளம் ஓடையை சீரமைத்து சாக்கடை நீர் கலக்காத வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, ரூ.183.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. அதன்படி, செம்மாம்பாளையம் தரைமட்ட பாலம் முதல் காரப்பாறை, புதுக்காலனி, பால்காரர் தோட்டம், செங்கோடம்பாளையம் வழியாக காமராஜ்நகர் தரைமட்ட பாலம் வரை பெரும்பள்ளம் ஓடையினை தூர்வாரி பூங்கா உயர்மட்ட பாலம் என 2.85 கி.மீட்டருக்கு ரூ.31.50 கோடி மதிப்பீட்டிலும், காமராஜர் நகர் முதல் வள்ளியம்மை நகர், அணைக்கட்டு நல்லியம்பாளையம் வழியாக அணைக்கட்டு தடுப்பணை வரை பெரும்பள்ளம் ஓடையினை தூர்வாரி பக்கவாட்டு சுவர் அமைத்து இருபுறமும் நடைபாதை, சாலை மேம்பாடு என 2.25 கி.மீட்டருக்கு ரூ.32.50 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.2ம் பகுதியாக சூரம்பட்டி அணைக்கட்டு பாலம் முதல் கிராமடை பாலம் வரை தூர்வாரி பக்கவாட்டு சுவர் அமைத்து பூங்கா, உயர்மட்ட பாலம், நடைபாதை என 2.10 கி.மீட்டருக்கு 33.20 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், கிராமடை பாலம் முதல் காந்திஜி ரோடு வரை 1.30 கி.மீட்டருக்கு 24.20 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், காந்திஜி பாலம் முதல் ரயில்வே பாலம் வரை 1.70 கி.மீட்டருக்கு 29 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ரயில்வே பாலம் முதல் பெரும்பள்ளம் ஓடை முடிவு வரை 1.55 கி.மீட்டருக்கு 26 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.