முள்ளக்காடு அருகே ஓட்டலை உடைத்து திருட்டு

ஸ்பிக்நகர், பிப்.7: முள்ளக்காடு ஹோட்டலில் பூட்டை உடைத்து பணம், பீடி, சிகரெட் பண்டல்களை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.  தூத்துக்குடி அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் அபிராமிநகர் விலக்கில் ஓட்டல் நடத்தி வருகிறார். இரவு வழக்கம் போல் கடையின் கதவை மூடிவிட்டு தர்மராஜ் தனது வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் மர்மபநபர் ஒருவர், கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கடையில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிகரெட் பாக்கெட்கள், பீடி பண்டல்கள், சில்லரை காசுகள் என மொத்தம் ரூ.8 ஆயிரத்தை திருடி சென்றுள்ளான். இது அப்பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி காமிராவில் பதிவாகிஉள்ளது. இவரது கடையில் ஏற்கனவே 2 முறை திருட்டு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தற்போது 3வது முறையாக திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இந்தபகுதியில் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த நிலையிலும், இந்த திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றுகூறப்படுகிறது. தொடர் திருட்டு சம்பவத்தால் ஸ்பிக்நகர், முத்தையாபுரம், முள்ளக்காடு, சுற்று வட்டாரவியாபாரிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வியாபாரிகள் சங்கம் சார்பில் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி குற்றச்செயலில் ஈடுபட்ட நபரை உடனே கைது செய்யவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: