பட்டுக்கோட்டை, பிப்.6: கல்லணையில் கால்வாய் பிரிவு வாய்க்கால், ஏரிகளை புனரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கல்லணை கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கல்லணை கால்வாய் பாசன விவசாயிகள் சார்பில் நசுவினி படுக்கை அணை விவசாயிகள் மேம்பாட்டு சங்கத்தலைவர் பொன்னவராயன்கோட்டை விவசாயி வீரசேனன் சமீபத்தில் பட்டுக்கோட்டைக்கு வந்திருந்த தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழக தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்தியகோபாலிடம் நேரில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: காவேரி மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக 1925 - 1935 ம் வருடங்களில் நிர்மாணிக்கப்பட்ட மூலம் 2.27 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இதன் மொத்த நீளம் 148.76 கிலோ மீட்டர் ஆகும். இத்திட்டத்தை கல்லணை கால்வாய் பாசன திட்டம் (G.A கேனல் ) என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 10க்கும் அதிகமான வருவாய் வட்டங்களை சேர்ந்த விவசாய நிலங்களும், 694 முறைசார் ஏரிகள் மூலம் 82,000 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகிறது.