சூலூர்,பிப்.4: குப்பைகளை அகற்றாததைக் கண்டித்து குப்பை டிரம்களை சாலையில் வைத்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்ணம்பாளையம் பேரூராட்சி ரங்கநாதபுரம் பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் அருகில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. வழக்கம்போல் நேற்று மாலை அப்பகுதி முழுவதிலும் சேர்ந்த குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் மீண்டும் அதே டிரான்ஸ்பார்மர் பகுதியில் கொட்டிவிட்டுச் சென்றனர்.இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அதை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி குப்பை டிரம்களை சூலூர்- கண்ணம்பாளையம் மெயின் ரோட்டில் வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.