மின்கம்பியில் மினிவேன் உரசி 2 பேர் காயம்

தேன்கனிக்கோட்டை, ஜன.31: தேன்கனிக்கோட்டை அருகே கொள்ளுபயிர் லோடு ஏற்றி சென்ற மினிவேன் மின்கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்தது. இதில் 2 பேர் காயமடைந்தனர். தேன்கனிக்கோட்டை அருகே எலசெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனப்பா (46). இவரது சகோதரர் சின்னராஜ் (30). இருவரும் கொள்ளு பயிரை அறுவடை செய்து, மினி வேனில் களத்திற்கு கொண்டு சென்றனர். வரதரெட்டிபாளையம் மாரியம்மன் கோயில் அருகே சென்ற போது, மினிவேனில் இருந்த கொள்ளுபயிரில் மின் கம்பி உரசியது. அதில் கொள்ளு பயிர் தீ பிடித்து எரிந்தது. இதை அறியாமல் வேனை ஓட்டி சென்றனர். சற்று தொலைவில் செல்லும் போது, தீ மளமளவென பரவி கேபின் வரை வந்துள்ளது.

வேன் தீப்பற்றி எரிவதை அறிந்து வண்டியை நிறுத்தினர். அப்போது தீ பிடித்த கொள்ளு பயிர் இருவர் மீதும் விழுந்து காயம் ஏற்பட்டது. மேலும், மினிவேன் முழுவதும் தீயில் எரிந்து நாசமடைந்தது. காயமடைந்த இருவரும், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: