அழகர்கோவில், ஜன. 31: அழகர்கோவில் மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படை வீடாக சோலைமலை முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா ஒன்றாகும். இந்த விழா நேற்று காலையில் 10.35 மணிக்கு தங்க கொடி மரத்தில் மேள தாளம் முழங்க மயில் உருவம் பதித்த கொடி ஏற்றப்பட்டது. இதில் நாணல் புல், வண்ண மலர்கள், மாவிலைகள் உள்ளிட்ட பொருட்களால் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின்னர் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு விசேஷ பூஜைகள் சரவிளக்கு தீபாரதனைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் சன்னதியில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நெய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் பூத வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று 31ம் தேதி காலை யாகசாலை பூஜைகள் நடைபெறும். பின்னர் உற்சவருக்கு மஹா அபிஷேகமும் யாகசாலை பூஜைகளும் மாலை 6 மணிக்கு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். பின்னர் நாளை 1ம் தேதி காலை வழக்கம்போல் பூஜைகளும், மாலை 6 மணிக்கு காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.