டிஇடி தேர்ச்சி பெற்றோர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

 

மதுரை, செப். 24: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில், மதுரையில் நேற்று கோரிக்கை ஆர்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் (டிஇடி) தேர்ச்சி பெற்ற 4 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு வேலை வழங்கக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில், நேற்று தல்லாகுளம் நேரு சிலை பகுதியில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். டிஇடி தேர்ச்சி பெற்று பல்லாண்டுகளாக காத்திருக்கும் தங்களுக்கு உடனடியாக ஆசிரியர் பணி வழங்க வேண்டும். இதற்கு முடியாத நிலையில் தங்களை தொகுப்பூதியத்திலாவது பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இப்போராட்டத்தில் பங்கேற்ற சிலர் கண்ணகி வேடம் அணிந்து கையில் சிலம்பு ஏந்தியடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post டிஇடி தேர்ச்சி பெற்றோர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: