திண்டுக்கல், ஜன. 31: திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில்முனைவோர்கள் ஊரக புத்தாக்க திட்டத்தில் பயன்பெறலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார். செம்பட்டியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் குறித்து தொழில்முனைவோர்கள், சமுதாய அமைப்புகளோடு திட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்து பேசுகையில், ‘கிராமப்புறங்களில் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற சூழல்களை உருவாக்கி தொழில் வாய்ப்புக்கான, தொழில் வகைகளுக்கான ஆய்வுகளை மேற்கொண்டு, மக்கள் பங்கேற்புடன், லாபம் தரத்தக்க ஊரக தொழில்களை கண்டறிதல் மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் ஊரக தொழில்களை வலுப்படுத்தி இயங்க வைத்தல், புதிய உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகளை கண்டறிதல், தொழில் வளர்ச்சிக்கான அடிப்படை சேவைகளை வழங்குதல், தொழில்களில் நிலைத்த தன்மையை உருவாக்கிட வழிகாட்டுதல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டம் ஊரக தொழில்முனைவுக்கு ஏற்ற சுழலை மேம்படுத்துதல், தொழிலுக்கான திட்ட நிதி வழங்குதல், தொழிலுக்குத் தேவையான பணியாளர்களை உருவாக்குவதற்காக திறன் வளர்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகள், திட்ட மேலாண்மை ஆகிய நான்கு கூறுகளை உள்ளடக்கி உள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுயஉதவிக்குழுக்களின் குழு உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினத்தவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து ஊரக தொழில் முனைவோர்களை உருவாக்கி, நிதி சேவைகளை வழங்கி, இதன்மூலம் வேலைவாய்ப்பினை உருவாக்குதலாகும்.